திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர பிரச்சாரம்!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.





அந்த வகையில் இன்று காலை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து நாகநாதர் கோவில், சிந்தாமணி கடை வீதி, வி.என் நகர், சறுக்கு பாறை, தேவதானம், ஈ.பி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பொது மக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் செந்தில்நாதனுக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்
அப்போது வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில்….
திருச்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள் சிலர் அதிகாரங்களை பயன்படுத்தி அராஜக போக்கில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் உள்ளார்கள். திருச்சி தொகுதியை பொருத்தவரை அன்றாட கூலி வேலை செய்பவர்கள் அடித்தட்டு மக்களே அதிகமாக உள்ளார்கள் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்துவேன். குறிப்பாக மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தயுடன், திருச்சி தொகுதியை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.




