திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கான இன்ப சுற்றுலா – மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
தமிழக அரசின் அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயல்பட்டு வரும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகள், மாவட்ட தலைநகரத்தில் இருந்து 100 கி.மீ.க்கு மிகாமல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு நாள் சுற்றுலா செல்ல தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று டால்பின் புற உலகு சிந்தனையற்றோாருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி, பிளாசம் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம், விடிவெள்ளி மன வளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், குடந்தை சேவா சங்கம் காது கேளாதோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் ஆகிய 6 பயிற்சி மையங்களில் இருந்து ஒரு மையத்திற்கு 20 குழந்தைகள் வீதம், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுடன் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அளத்தூர் கிராமத்தில் உள்ள எஜமான் பண்ணை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.



தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் ரூ.60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு செலவில் மூன்று
பேருந்துகளில் சுற்றுலா செல்லும் சிறப்பு குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திட்ட உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

