காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் முதலிடம்!
திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16 தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் (டிஎஸ்பி முதல் ஐஜி வரை) பலரும் பங்கேற்றனர்.

இதில், ஒட்டுமொத்த போட்டியில் திருச்சி மாநகர காவல்துறை (வடக்கு மண்டல) துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா முதல் பரிசை தட்டிச்சென்றார். திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ரைபிள் பிரிவில் முதலாவது இடத்தையும், ஒட்டுமொத்த துப்பாக்கி சூடு போட்டியில் இரண்டாவது இடத்தையும், பெற்று வெற்றி பெற்றார். பிஸ்டல் பிரிவில் திருவாரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் முதலாம் இடத்தைப் பெற்றார்.
திருச்சி மாநகர வடக்கு மண்டல காவல் துணை ஆணையர் விவேகானந்த சுக்லா இரண்டாவது இடத்தையும், ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சணாஸ் 3 ஆவது இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். காவல்துறைத் தலைவர் கார்த்திகேயனுக்கு துணைத் தலைவர் மனோகரன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

