ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் , மாநகர் பகுதி விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
243.78 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், 106.20 கோடி ரூபாயில் கனரக சரக்கு வாகன முனையம் கட்டும் பணி, சாலைகள், மழைநீர் வடிக்கால் மற்றும் உள்கட்டமைப்பு வசதி, நகரும் படிக்கட்டுகள், ஏசி அறைகள், இரண்டு அடுக்கு தளங்கள், என அதி நவீன வசதிகளுடன் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர் .
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்….
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை மாநகராட்சி மேயர், ஆணையர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.