ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்
ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்
20-வது ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூலை 23 முதல் 29 ஆம் தேதி வரை
சவுத் கொரியாவில் நடைபெற்றது. இதில் சீனியர் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் ஆறு போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியுற்று வெள்ளி பதக்கத்தை பெற்றது. இந்திய அணியில் திருச்சி மாவட்டம் வடுகபட்டி ஹாக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப்பை சேர்ந்த கெவின் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் போட்டிகள் முடிந்து நேற்று கெவின் நாடு திரும்பினார். அவருக்கு ஹாக்கர் ஸ்கேட்டிங் கிளப் சார்பாக மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கெவின் பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்து பாராட்டினர்.
அதனைத் தொடர்ந்து கெவின் செய்தியாளர்களிடம் பேசுகையில், போட்டியில் 10 வீரர்களில் ஒருவராக பயிற்சி ஆட்டத்தில் இருந்தேன். அதன் பிறகு மைதானத்தில் விளையாடும் முக்கிய ஐந்து வீரர்களில் ஒருவராக பங்கேற்று விளையாடினேன். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் இந்தியாவிற்கு விளையாட தேர்வாகுவது கடினமாக உள்ளது. தேர்வுகள் அனைத்தும் வடமாநிலங்களில் நடைபெறுகிறது. மொழி ஒரு பிரச்சனையாக உள்ளது. இதையெல்லாம் தாண்டி இந்திய அணிக்காக விளையாடி பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு அரசு ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி வீரர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. மேலும் அவர்களுக்கு கூடுதல் உதவிகளை செய்து பயிற்சிக்கான கட்டணங்களை கொடுத்தால் உதவிகரமாக இருக்கும். ஒரு மாதம் வரை இந்த பயிற்சி வட இந்திய மாநிலங்களில் நடைபெறுவதால் ஏழை எளிய மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கெவின் பயிற்சியாளர் பசூல் கரீம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10,500 சதுர மீட்டரில் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கிக்கு தமிழ்நாடு அரசு மைதானம் அமைத்து கொடுத்தால் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை தமிழ்நாடு வீரர்கள் பெற்று தருவார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Comments are closed.