வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன – தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அயிலை சிவ சூரியன் பேட்டி!
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன் திருச்சியில் இன்று பேட்டியளித்தார், அதில்…
தமிழக அரசு தனது 5 வது நிதி நிலை அறிக்கையை நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. நாளை மறுதினம் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. விவசாயிகளாக நாங்கள் தமிழ்நாடு அரசிடம் இருந்து அதிகமான சலுகைகளை எதிர்பார்க்கிறோம். இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல விவசாயிகளுக்கு என தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து சில திட்டங்களை நிறைவேற்றியது. இதனை மனதார பாராட்டி வரவேற்றோம்.
ஆனால் இன்றைய சூழலில் இந்த ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்னாள் தேர்தல் வாக்குறுதியில் அளித்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹.2,500 வழங்குவோம், அதுபோல கரும்புக்கு டன்னுக்கு ₹4,000 வழங்குவோம் என்ற உறுதிமொழி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இன்றைக்கு உற்பத்தி செலவை கணக்கில் எடுத்து கொண்டு நெல்லுக்கு குறைந்த பட்சம் ₹.3,500 அல்லது ₹.3,000 வழங்க வேண்டும், கரும்புக்கு டன்னுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல பால் கொள்முதலில் நீண்ட நாட்களாக விலையை உயர்த்தாமல் உள்ளது. பசும்பாலுக்கு ₹.45, எருமை பாலுக்கு ₹.55 வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கேட்டு கொண்டு உள்ளோம். இதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிக்க வேண்டும்.
தற்போது வேளாண் தொழில் இயந்திர மயமாகிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவது போல, விவசாயிகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது வறட்சியான சூழலில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டி உள்ளது. திருச்சி காவிரி ஆற்றில் நூறுக்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் 40 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 120 அடிக்கும் கீழ் போய்விட்டது. இதனால் கூடுதல் கதவனைகளும், தடுப்பணைகளும் அமைப்பதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
பல்வேறு ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சுருக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். மேலும் ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நிதி ஒதுக்கி மாநிலத்தில் வேளாண்மை தொழிலை முதன்மை தொழிலாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Comments are closed.