பாஸ்போர்ட்டில் போலி அரசு முத்திரை – திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்யும் நபர்கள் இமிகிரேசன் பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.