மரபை மாற்றியது மத்திய அரசு – ராகுல் குற்றச்சாட்டு
மரபை மாற்றியது மத்திய அரசு – ராகுல் குற்றச்சாட்டு

வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தியா வருகிறார். இந்தியா – ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.இந்தப் பயணத்தின் போது, அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அதிபர் புதின் வருகையை ஒட்டி, டெல்லி போலீஸ் உயரதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், துப்பாக்கிச் சுடும் வீரர்கள், ட்ரோன்கள், ஜாமர்கள் உட்பட பல்வேறு அம்சங்களுடன் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிபர் புதினை சந்திக்க எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களிடம் எம்பி ராகுல் பேசியதாவது: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சி காலங்களிலும் இது கடைபிடிக்கப்பட்டது.ஆனால், தற்போது வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும்போதும், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்துகிறது. நாமும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இது வெறும் அரசு மட்டும் இல்லை.இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலக்கியே வைத்துள்ளது. போதிய பாதுகாப்பின்மையால் இதுபோன்று செய்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருப்பதை இந்த அரசு விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed.