திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் 03.03.2024 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெற உள்ளது. அன்றைய தினம், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டுகள் போலியோ சொட்டு மருத்து வாய்வழியாக வழங்கப்பட உள்ளது.
27.03.2014 ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ நோய் தாக்கம் இல்லை என்று சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் இருப்பதால் தொடர்ந்து இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக வருகின்ற 03.03.2024 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1290 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 290 மையங்களிலும் என மொத்தம் 1580 மையங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊரக மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருத்து வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 52 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 61 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் 03.03.2024 முதல் 05.03.2024 வரை ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
03.03.2024 அன்று கிராமப்புறங்களில் 124465 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 65630 குழந்தைகளுக்கும், இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ள 91 குழந்தைகள் மற்றும் அகதிகள் முகாமில் உள்ள 81 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 190267 குழுந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருத்தாலும் வருகின்ற 03.03.2024 அன்று நடைபெறும் முகாமில் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கும்.
எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் மையத்திற்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

