மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்பது சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு 9 அடி உயர நடிகர் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது. அவரது சிலை அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதற்கிடையில், சிலையை திறக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த மோகன் பாலாஜி என்ற ரசிகர் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மதுரை உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவில் சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே திருச்சியில் வேறொரு முக்கிய சந்திப்பில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிவாஜி கணேசன் சிலையை வைக்கலாம் என்று கூறியுள்ளது.



இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதராஜ் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், கலை, கோவிந்தராஜன் ஆகியோர் பாலக்கரையில் மூடப்பட்டிருக்கும் சிவாஜி சிலையை பார்வையிட்டனர். தொடர்ந்து காங்கிரசார் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
திருச்சியில் எந்த இடத்தில் சிலை வைக்கலாம் என்பது குறித்து கேட்டறிய
நீதிமன்றத்தில் இருந்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு வந்துள்ளது. சரியான இடத்தை தேர்வு செய்வதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுக்க உள்ளோம். இது குறித்து ஏற்கனவே தமிழக அரசிடமும், சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். மிகப்பெரிய மாநகரில் சிலை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது.
தமிழக முதல்வரும் சிவாஜி ரசிகர் தான். எனவே அவர் சரியான முற்றுப் புள்ளி வைப்பார் என தெரிவித்தார்.

