தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் திருச்சி மாவட்டம் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது,….
தமிழகத்தை பொறுத்தவரை கூட்டுறவு வங்கி கூட்டுறவு சங்கங்கள் தான் மிக பிரதானமான துறையாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் எந்த துறையாக இருந்தாலும் கூட்டுறவு துறை என்பது இல்லாமல் செயல்பட முடியாது. நம்முடைய தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக 610 புதிய கூட்டுறவு வங்கி கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதேபோல் நிலவள வங்கி, நகர வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி என அனைத்திற்கும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
கலைஞரின் ஆட்சி காலத்தில் 26 ஆயிரம் நியாய விலைக்கடைகள் இருந்தது. அதில் 5000 கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் இருந்தன. மீதமுள்ள கடைகள் வாடகை கட்டிடம் என்பதால் ஒரே ஆண்டில் 12,000 புதிய கட்டிடங்களை கலைஞர் கட்டிக் கொடுத்தார். இன்று திருச்சி மாவட்டத்தில் 1254 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 8 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. புதிதாக 67 சொந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 133 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே பாராளுமன்ற தொகுதி நிதியில் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். 4900 தொடக்க கூட்டுறவு வங்கிகள் உள்ளது. அதில் 1500 வங்கிகள் தங்களுடைய சொந்த நிதியில் செயல்பட்டு வருகிறது. மீதம் உள்ளவை அரசின் உதவிபெற வேண்டிய நிலை உள்ளது. நடப்பாண்டில் வட்டி இல்லாத கடனாக இதுவரை 600 கோடி வழங்கப்பட்டுள்ளது. எந்த தனியார் வங்கிகளாக இருந்தாலும் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்த பின்னரே மகளிர் கடன் வழங்குவார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகள் ஒருவர் கடனை திருப்பி செலுத்துவார் என்ற உறுதிபாட்டை அதிகாரிகளுக்கு தெரிந்தாலே அவருக்கான கடன் வழங்கப்படும். அதேபோல் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கூறினார். நம்முடைய முதல்வர் பெண்களுக்காகவே பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதில் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயண வசதி, கல்லூரி பயிலும் மாணவிகளுக்கான உதவி, முதியோர் உதவி தொகை உயர்வு என பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கான வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய துறையாக செயல்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் அரசு, பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், கதிரவன் மற்றும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள், பல்வேறு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.