திருச்சியில் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய தனிப்படை எஸ்.ஐ மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் – மாவட்ட எஸ்.பி அதிரடி!
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு புத்தாநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லியோனி ரஞ்சித்குமாா் தலைமையில் வையம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் வீரபாண்டி, சாகுல் ஹமீது மற்றும் மணப்பாறை காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தனிப்படையினா் கடந்த 9 ஆம் தேதி வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஏா்கன் எனப்படும் வேட்டைத் துப்பாக்கியுடன் பறவை வேட்டையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், கல்லி அடைக்கம்பட்டியை சேர்ந்த சதாசிவம், ராமசாமி, மலைக்குடிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்துள்ளனர்.
பின்னா் அவா்கள் மீது வழக்குப் பதியாமலிருக்க தனிப்படை போலீஸாா் ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பின்னர் வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் வைத்து சதாசிவம் என்பவரின் உறவினர் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண் காணிப்பாளரின் உதவி எண்ணிற்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் நடத்திய விசாரணையில், தனிப்படை போலீஸாா் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் லியோனி ரஞ்சித்குமாா், காவலா்கள் வீரபாண்டி, சாகுல் ஹமீது, மணிகண்டன் ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. வருண்குமாா் உத்தரவிட்டாா். மேலும் இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Comments are closed.