திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: ஒரே நாளில் ₹12.20 லட்சம் தங்கமும், ₹13.34 லட்சம் வெளிநாட்டு பணமும் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: ஒரே நாளில் ₹12.20 லட்சம் தங்கமும், ₹13.34 லட்சம் வெளிநாட்டு பணமும் பறிமுதல்!
திருச்சி:
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில், ஒரே நாளில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா (Air Asia) விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளைச் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு பயணியின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, அவர் 78.50 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் ₹12.20 லட்சம் ஆகும்.

சிங்கப்பூர் வழியாக வெளிநாட்டுப் பணம் கடத்தல் முயற்சி
இதேபோல், திருச்சி விமான நிலையத்தின் புறப்பாடு (Departure) பகுதியில், சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்ல முயன்ற பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது இரு பயணிகள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்களது உடமைகளில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு ₹13.34 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விசாரணை:
இரண்டு வெவ்வேறு சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் ₹25.54 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தச் கடத்தல் சம்பவங்கள் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
#TrichyAirport #GoldSmuggling #CustomsSeizure #TrichyNews #ForeignCurrency #AirAsia #BreakingNewsTrichy #TamilNaduNews





Comments are closed.