திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்!
தமிழ்நாடு பட்டதாரி – முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில சிறப்புத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களை எடுத்துரைத்துரைத்தார்.




இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:-
கோடைகால வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதினால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தூய குடிநீர், ஆரோக்கியமான சிறுநீர் கழிப்பிடம் மற்றும் ஆரோக்கியமான கழிப்பறை வசதிகளை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்திட வேண்டும். 2003 க்கு பிறகு தமிழ்நாடு அரசின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 2004 முதல் 2006 வரை வெவ்வேறு காலங்களில் தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்யப்பட்டு பணி ஆற்றிய அனைத்து வகை ஆசிரியர்களையும் அவர்களது நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்து ஆணை பிறப்பித்திட வேண்டும்.
காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவித்து ஒப்படைப்பு செய்து பணமாக்கிக் கொள்ள ஆணை பிறப்பித்திட வேண்டும். பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிடவும், பட்டதாரி ஆசிரியருக்குரிய முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை விரைந்து வழங்கி பள்ளி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும். பள்ளி துணை ஆய்வாளர் டி ஐ பணியிடங்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக மாற்றி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.




