திருச்சி நவலூர் குட்டப்பட்டில் சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி – 830 காளைகள் பங்கேற்பு!
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நவலூா் குட்டப்பட்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி, கிராம குழு சார்பில் நேற்று நடைபெற்றது. போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 830 காளைகளும், 379 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டு அடக்கினா். காளைகளை அடக்கிய வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, நாற்காலி, ரொக்கத் தொகை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 56 பேர் காயமடைந்தனா். இவா்களில் 15 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.




போட்டியின்போது அவிழ்த்துவிடப்பட்ட மதுரை மேலமடையைச் சோந்த அருண் பிரதாப் என்பவரின் காளையானது போட்டி நடைபெற்ற இடத்தை தாண்டி ஓடி கட்டளை மேட்டு வாய்க்காலில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தது. கால்நடை மருத்துவக் குழுவினா் அளித்த சிகிச்சை பலனின்றி காளை உயிரிழந்தது. திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 9 ஆய்வாளா்கள் உள்பட 275 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியினை நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் , மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முகம், டேவிட் ராஜதுரை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலையரசன், கிராம பட்டயதாரர்கள் செல்வமணி, செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அரவங்கல்பட்டி கண்ணுசாமி உடையார் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.




