திருச்சி காந்தி மார்கெட்டில் பொங்கல் பண்டிகை விற்பனை படுஜோர் – அலைமோதும் மக்கள் கூட்டம்!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (15-ந்தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற காந்தி மார்க்கெட் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே களைகட்டத் தொடங்கி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கரும்பு, மஞ்சள், வெல்லம், மண் பானைகள் மற்றும் காய்கறிகள் வாங்கி சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கடந்த வாரமே வந்து குவியத்தொடங்கியது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று முதல் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப் பட்டது. மாநகர போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். செங்கரும்புகள் திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலை, கிளிக்கூடு, உத் தமர்சீலி, பனையபுரம் ஆகிய பகுதியில் இருந்தும் கரூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் பாரம்பரியமிக்க மண்பானைகள் அதிக இடங்களில் வர்ணம் தீட்டப்பட்டு விற்கப்பட்டன. அதேபோல் வெண்கல பானைகள் வாங்கவும் பாத்திரக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் படையலில் முக்கிய இடம்பிடிக்கும் வாழை இலை, பழம், தேங்காய், இஞ்சி விற்பனையும் களை கட்டியது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. பொங்கல் பானை ரூ.300 முதல் ரூ. 1000 வரையும், செங்கரும்பு 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.350 வரையிலும், ஜோடி ரூ. 100 க்கும், மஞ்சள் கொத்து ரூ.50 க்கும், கூழைப்பூ ரூ. 30 க்கும், வாழைத்தார் ரூ. 500 முதல் 1000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், பூக்கள் விலையும் 3 மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூ கிலோ ரூ.3000, முல்லைப்பூ ரூ.2,000, ஜாதிப்பூ ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1,000, செவ்வந்தி பூ ரூ.250, அரளிப்பூ ரூ.250, ரோஜா ரூ. 220, துளசி ஒரு கட்டு ரூ.60, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.60 என்ற விலையில் விற்கப்பட்டது. மார்கழி மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.