திருச்சியில் வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
திருச்சி மாவட்ட தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வாழை ரகங்களின் கண்காட்சி மற்றும் வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் செயல்விளக்கத்தினை பார்வையிட்டு, வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொடர்பான கையேட்டினை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல், மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் பரமகுரு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் குமாரகணேஷ், துணை வேளாண்மை வேளான் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குநர் சரவணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முருகன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.