உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டி திருச்சியில் நடைபெற்றது
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர் தொண்டு அமைப்புகள் சார்பில் மாற்றுத்திறனாளிக்கான நிதியை திரட்டுவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளால் கிடைக்கும் வருமானத்தை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் REHABINDIA CHARITABLE TRUST சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒப்பனைகளை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும், சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டியும் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டு 45 நிமிடங்களில் மணப்பெண் அலங்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இந்த போட்டி நடத்தப்பட்டதாகவும், இந்த போட்டியின் மூலம் வரும் நிதியை திரட்டி மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் என தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.










