நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீண்டும் இந்த பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்து !
நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீண்டும் இந்த பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்து !

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், தொடக்கத்தில், கடவுள் வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 1967-ம் ஆண்டு வெளியான ‘கந்தன் கருணை’ திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு பல கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிகர் சிவக்குமார் சொற்பொழிவாற்றி வருகிறார். நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்தவர்களின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பட்டத்தை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மையார் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இந்த மாண்பு தொடர வேண்டும். டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்தின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவிற்கான மானியம் ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வளையங்குளத்தில் கிராமிய கலை பயிற்சி பள்ளி அமைக்க அரசின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-
2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அதே 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி கோவை இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. திரைப்படத் துறையில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மேடையிலே பேசிய நான் நமது இன்றைய முதலமைச்சரை பார்த்து இன்று மஞ்சள் துண்டு போர்த்தப்பட்டு நாளை தமிழக முதலமைச்சராக போகின்ற அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்டு பேசினேன். அந்த வாழ்த்து பொய்யாகவில்லை. அடுத்த 3 ஆண்டுக்குள் 2021 ஏப்ரல் 7-ந்தேதி இதோ இங்கு முதலமைச்சராக நம்மிடையே வந்து அமர்ந்துள்ளார். தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு உங்கள் சார்பில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய இந்த பல்கலைக்கழகத்துக்கு இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிறுவயதில் இருந்து அதிகமாக சினிமாக்கள் பார்த்ததில்லை. 14 வயது வரை நான் பார்த்த மொத்த படங்கள் வெறும் 14 தான். அதில் மறக்க முடியாத படங்கள் பராசக்தி, மனோ கரா, இல்லறம், இல்லற ஜோதி, ராஜாராணி போன்ற படங்கள். அந்த படங்களில் கலைஞர் வசனங்களை 15 வயதிலே மனப்பாடம் செய்து விட்டேன். கலைஞர் என்னிடம் நான் எஸ்.எஸ்.எல்.சி. எழுதாமல் தவிர்த்தேன் என்று என்னிடம் சொன்னார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத ஒரு இளைஞன், சங்க இலக்கிய பாட்டுக்கு உரை எழுதி உள்ளார். அவரது வசனம் கற்பனையே பண்ண முடியாது. அந்த அளவுக்கு அமைந்துள்ளது. அந்த இலக்கிய தாத்தாவுக்கு மகனாக பிறந்து இதோ மேடையில் இருக்கிற அவரது வாரிசு, இன்றைக்கு திறம்பட ஆட்சி செய்து காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், வீடுதேடி மருத்துவம் என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் மீண்டும் இந்த பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். இவ்வாறு சிவக்குமார் பேசினார்.





Comments are closed.