திருச்சி நத்தர் வலி தர்கா முன்னாள் அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்பு வாரிய அலுவலகத்தில் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் புகார்!
திருச்சி ஹஜ்ரத் நத்தர் வலி தர்கா அறங்காவலராக செயல்பட்டு வந்த அல்லா பக்ஸ் (எ) முகமது ஹவுஸ் என்பவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவரது பொறுப்புகளை வக்பு வாரிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மதிக்காத அல்லா பாக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நத்தர் ஷா பள்ளிவாசல்
ஜமாத்தார் தலைவர் சையத் ஜாகீர் தலைமையிலான ஜமாத்தார்கள், திருச்சி வக்பு வாரிய அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.


அதனை தொடர்ந்து பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சையத்ஜாகீர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,..

திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் அறங்காவலராக அல்லா பக்ஸ் (எ) முகமது கௌஷ் இருந்து வந்தார். அவருடைய பதவி காலம் கடந்த 4 ஆம் மாதம் முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வக்பு வாரியத்தில் 3 அறங்காவலர்களை நியமனம் செய்துள்ளனர். அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று முகமது கௌஷ் தடை உத்தரவு பெற்றார். ஆனால் சென்னை நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் இவருடைய பதவி காலம் முடிந்து விட்டது. எனவே நீடித்திருக்க முடியாது. எனவே, இவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேலும் வக்ஃபு வாரிய பொறுப்புகள் அனைத்தையும் திருச்சி வக்பு வாரிய ஆய்வாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால் அந்த உத்தரவை மீறி அவர் நத்தர்ஷா பள்ளிவாசலில் உள்ள அலுவலகத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார். எந்த உத்தரவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறி வருகிறார். நாங்கள் அவரிடம் நீதிமன்ற உத்தரவை தெரிவித்தும் உத்தரவை மதித்து நடப்பதில்லை. எனவே, நாங்கள் இன்று திருச்சி வக்பு வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். மேலும், தர்காவுக்கு வருகின்ற வருமானம் குறித்து தனியாக விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் புகார் கொடுத்துள்ளோம். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக காவல்துறை அனுமதியுடன் வக்பு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.





Comments are closed.