திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பாளை மத்திய சிறை கைதியிடம் டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணை. தண்டனை கைதியிடம் 3 மணி நேரம் விசாரணை
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பாளை மத்திய சிறை கைதியிடம் டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணை. தண்டனை கைதியிடம் 3 மணி நேரம் விசாரணை
தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி தனது வீட்டிலிருந்து அதிகாலையில் நடை பயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார். அப்போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனால் சி.பி.ஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக காவல் துறை சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க ஐ பி எஸ் அதிகாரி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்ட நிலையில் திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரியாக நியமித்தது. விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டி.ஐ.ஜி வருண்குமார் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்து திடீர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சுடலைமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தண்டனை கைதியான சுடலை முத்து திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த சமயத்தில் தொழிற் பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது, . அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருப்பவருமான செந்தாமரை கண்ணன் பறிமுதல் செய்து உடைத்து விட்ட நிலையில் இன்று டி.ஐ.ஜி தலைமையில் போலீசார் வந்து அவரிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார்
3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
Comments are closed.