பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் G.O.100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை கலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திடவும் மற்றும் இதர திருத்தப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு – CITU ( திருச்சி) சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள Re Deployment, Discontinued உத்தரவை திரும்ப பெற வேண்டும். G.O.100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை கலைந்து அரசு உத்தரவாத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்கிட காலதாமதம் செய்யக்கூடாது.
அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்பநல நிதி ரூபாய் 5 லட்சத்தை மின் வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும். மின்விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நீதி ரூபாய் பத்து லட்சம் அறிவித்ததற்கான அரசாணை, வாரிய உத்தரவு உடனடியாக வெளியீடு வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்திட வேண்டும்.
1.12.2019 க்கு பின் வாரியப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு உத்தரவு வெளியிட வேண்டும். கேங்மேன் ஊர் மாற்றம், கள உதவியாளர் பணி மாற்றம் பெற்றிட வேண்டும். உள்முக தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட Crucial data – ஐ கைவிட வேண்டும். பிரிவு அலுவலகங்களில் நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்ததாரர் மூலம் ஆட்கள் நியமிப்பதை கைவிட்டு, ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு வாரியமே தினக்கூலி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு – CITU, மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.