மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி பாலத்தில் வரையப்பட்டுள்ள மிக பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகம்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மிக பிரமாண்ட அளவில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதியமான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.