திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் பசை வடிவிலான தங்கத்தை தனது உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் வயிற்றில் இருந்த தங்கம் மருத்துவச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. அதில் 1 கிலோ 61 கிராம் எடை கொண்ட, ரூ.66.68 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது. தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.