அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக தில்லை நகர் பகுதி சார்பில், உறையூர் குறத்தெரு பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தில்லை நகர் பகுதி செயலாளர் பூபேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்….
எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை பெருவாரியான மாவட்டங்களில் நடத்தி, ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். ஆனால் இன்று கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முக.ஸ்டாலின் தன்னுடைய குடும்ப விழாவாக நடிகர்களை வைத்து கொண்டாடி வருகிறார்.
ஊழலை பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார். செந்தில் பாலாஜியின் தம்பியை ஒளித்து வைத்துள்ளனர். மகாத்மாவின் மைத்துனர்கள் போல திமுகவினர் உத்தமர்கள் நாங்கள் தான் எனக்கூறி வருகின்றனர். பொன்முடி உள்பட 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது.

இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் 3.25 லட்சம் ரூபாய் கடன் சுமை ஸ்டாலின் ஆட்சியில் ஏறி இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
முதல்வர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் என்று சொல்லாமல் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார் என்று பொய் சொல்கின்றனர். ஸ்பெயின் நாடு உலகில் 14 வது இடத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னேறி உள்ளது. அவர்கள் தமிழ் நாட்டிற்கு ஏன் தொழில் தொடங்க வர வேண்டும். 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாட்டிற்கு ஸ்டாலின் சென்ற போது 3323 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால் 1342 கோடி தான் முதலீடு ஈர்க்கபட்டுள்ளது.

டாஸ்மாக் மது விலையை உயர்த்தி உள்ளனர். இதன் மூலம் 800 கோடி கொள்ளையடிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் 1 லட்சம் பேர் கூட கூடவில்லை.
உரிமை மீட்பு போராட்டம் என ஓபிஎஸ் தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார். என்ன உரிமை இருக்கிறது ?. 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை பொதுக்குழுவில் நீக்கி விட்டாகிவிட்டது. அனைத்து நீதிமன்றங்களும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்பதை உறுதி செய்துள்ளது.
மோடிதான் நாட்டின் பிரதமர். ஆகவே யாராவது கூட்டணிக்கு வாங்க என ஓபிஎஸ், தினகரன் கூறி வருகின்றனர். நரேந்திரமோடி தான் இந்நாட்டின் பிரதமர் என நாங்களும் சொல்லி கொண்டு இருந்தோம். ஆனால், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என பாஜகவினர் பேசியது சரியல்ல. எங்களை மிரட்ட அண்ணாமலையை வைத்து பேச வைத்ததால், அமித்ஷா, மோடியிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியவர் எடப்பாடி பழனிச்சாமி.
இஸ்லாமிய மக்கள், கிறித்துவ மக்கள் இன்று எங்களை ஆதரிக்கிறார்கள்.
ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா ஆகியோர் மண்குதிரை போன்றவர்கள. அவர்களை ஆதரிக்கும் நண்பர்கள் இனியும் அவர்களை நம்பாதீர்கள்.
டிடிவி, பன்னீர் செல்வம் அணியில் இருப்பவர்கள் தேர்தலுக்கு ஏதாவது பணம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பணம் வாங்கியவுடன் எடப்பாடியின் அணியில் சேர்ந்து விடுவார்கள் என பேசினார்.




