நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்த நிலையில், சீமானுக்கு எதிராக தற்போது ஒன்றிணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை.
எதற்கெடுத்தாலும் என் கட்சி, என் கட்சி என சீமான் பேசுகிறார். சீமான் மட்டுமே நாம் தமிழர் கட்சியை வளர்த்தாரா? ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் எங்கே போவது. தமிழ்தேசியம், பிரபாகரனை நேசித்து இந்த கட்சிக்கு வந்தோம். தற்போது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகம் சரியில்லை. கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது. அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர். கட்சிக்கென சட்ட, திட்டம் ஏதும் இல்லை. 15 ஆண்டுகளாக உழைத்தவர்களை விடுத்து, யாரோ ஒருவரை கொண்டு வந்து இவர்தான் வேட்பாளர் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க பணம் வசூல் செய்து கொடுத்தோம். அதேபோல அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வசூல் செய்து கொடுத்தோம். அவைகள் இதுவரை இலங்கை தமிழ் மக்களுக்கு சென்று சேரவில்லை. தமிழ்தேசிய அரசியலை ஏற்றுக்கொண்ட எங்களால் இனியும் சீமானுக்கு அடிமையாக இருக்க முடியாது. உண்மையாகவும், நேர்மையாகாவும் செயல்பட்டால் சீமானுக்காக என் உயிரையும் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
Comments are closed.