திருச்சியில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பத்மஶ்ரீ தாமோதரன், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் வேட்பாளர் தாமோதரனுக்கு, பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.




அந்த வகையில் இன்று திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போதாவூர் பகுதியில் ஒவ்வொரு வீடாக நடந்து சென்று பொது மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.




அப்போது வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன் பேசுகையில்…
40 வருடம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன். மக்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்துள்ளேன். திருச்சி, புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நான் சென்றுள்ளேன். அங்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் நான் நன்கு அறிவேன்.
அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, விவசாயிகளின் தேவை, தொழில் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து எனக்கு நன்றாக தெரியும். குறிப்பாக இந்த பகுதிகளில் விவசாய மேம்பாடு அவசியம் தேவை.
இயற்கை வள மேலாண்மைக்காக நான் பாடுபடுவேன். பாராளுமன்ற உறுப்பினராக என்னை வெற்றி பெற செய்தால் விவசாயிகளின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பேன். ஆகையால் இப்பகுதி மக்கள் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.




