சுட்டெரிக்கும் வெயிலில் கரும்பு ஜுஸ் போட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!
நாட்டின் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து வேட்பாளர்கள் இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இப்பரப்புரையின் ஒரு பகுதியாக, இன்று திருச்சி சுந்தர் நகர், கே.கே.நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்று பயணித்தபடி வீதி வீதியாக பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது சுந்தர் நகர் பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்ற வேட்பாளர் தாமோதரன், தன் கைகளாலே கரும்புசாறு தயாரித்து கோடை வெய்யிலுக்கு இதமாக பொது மக்களுக்கு வழங்கி மக்களிடம் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து சிறிது நேரம் அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் ஓட்டிற்கு பணம் தராமல், லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அமைந்திடவும், படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், தொகுதி மக்களுக்கு தேவையான சட்டங்கள், திட்டங்கள் கொண்டு வரவும், விவசாயிகளின் காவிரி பிரச்சினைகளை களையவும், அதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிடவும் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என கேட்டுக்கொண்டார்.