தனியார் இடத்தில் பதாகை வைத்து பணம் கேட்டு மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்பியிடம் புகார்!
திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,….
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் கீழக்குறிச்சி கிராமத்தில் நானும் எனது நண்பன் கண்ணன் என்பவரும் சேர்ந்து இடம் ஒன்றை வாங்கி, அதனை கடந்த ஆண்டு கிரையம் செய்தோம். அந்த இடத்தில் பழைய பாழடைந்த ஒரு கட்டிடத்தின் சுவர் மட்டும் விழக்கூடிய சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தது. அதனை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கண்ணன் தொடர்ந்த வழக்கில், கடந்த 3 ஆம் தேதி திருவெறும்பூர் வட்டாட்சியர் பரிசீலனை செய்து அந்த பாழடைந்த சுவரை இடிக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறை அனுமதியுடன் கடந்த 12 ஆம் தேதி சுவர் இடிக்கப்பட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தோம். இந்நிலையில் அந்த இடத்தில் சாமானிய மக்கள் நல கட்சியை சேர்ந்த ஜோசப் மற்றும் அவருடன் சிலர் இணைந்து பதாகை ஒன்றை வைத்துள்ளனர். அதில் எங்களது புகைப்படம் மற்றும் ஆதார் கார்டை வைத்து மிகவும் இழிவாக சித்தரித்துள்ளனர். மேலும் அந்த பதாகையை எடுக்க வேண்டும் என்றால் ₹.30 லட்சம் பணம்
இரண்டு நாட்களில் தர வேண்டும் என மிரட்டி விட்டு சென்றனர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் இந்த இடம் ராணி மங்கம்மாள் மண்டபம் என்றும், புறம்போக்கு இடம் என்றும் தவறான அவதூறுகளை மக்களிடம் பரப்பி பொய்யான செய்திகளை சில அமைப்புகளையும் சங்கங்களையும் கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் எங்களது போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தொடர்ந்து என்னை இழிவு படுத்தி வருகின்றனர். எனவே ஜோசப் மற்றும் அவருடன் இருந்த சிலர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.