பென்காக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான பென்காக் சிலாட் போட்டியானது, தமிழகத்தில் தற்காப்புக்கலையாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த பென்காக் சிலாட் போட்டி சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற 8 வது ஆசிய பென்காக் சிலாட் போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 16 நாடுகள் பங்கேற்றது. இதில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உள்பட 36 வீரர்கள் கலந்து கொண்டனர்.


போட்டியின் முடிவில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 12 வெண்கலத்துடன் ஐந்தாவது இடத்தை தக்கவைத்தது. ஆசிய போட்டியில் சண்டை பிரிவில் திருச்சியை சேர்ந்த கமலேஷ் 95 கிலோ எடைபிரிவிலும், அரவிந்த பிரகாஷ் 90 கிலோ எடைபிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர். பதக்கங்கள் வென்று விமானம் மூலம் திருச்சி வந்த வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்கள், வீரர் வீராங்கனைகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதே நேரம் இரு வீரர்களும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தேர்வாகியுள்ள நிலையில் அந்தப் போட்டிகளிலும் நிச்சயம் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என உறுதிப்பட தெரிவித்தனர். நடப்பாண்டு பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டியில் பரீட்சார்த்த முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த பென்காக் சிலாட் போட்டிகள் சேர்க்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.