பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

தமிழ்நாடு அரசினுடைய கூட்டுறவுத்துறை கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை பிறப்பித்தது, அதில் இனி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களிலே கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே கடன் வழங்குவோம் என அறிவித்துள்ளனர். மேலும் விவசாயிகள் தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகளிலே ஏற்கனவே பயிர் கடன் பெற்றிருந்தால், இனி கூட்டுறவு சங்கங்களில் அந்த விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட மாட்டாது என்பதையும் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உற்பத்தி செலவு அதிகமான மாநிலம். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டிலே விவசாயிகளுடைய விளை பொருட்கள், அனைத்து பயிர்களுக்குமான உற்பத்தி செலவு என்பது 40 முதல் 50 சதவீதம் அதிகமாக இருக்கும் மாநிலம். விவசாய தொழிலாளர்களின் சம்பளம், வாகனங்களின் வாடகை தமிழ்நாட்டில் அதிகம். மேலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விதை, மருந்து, உரம் நிறுவனங்கள் கூட மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் முப்பது சதவீதம் அதிகமான விலையில் விற்பனை செய்கின்றனர்.

- Advertisement -

உற்பத்தி செலவு அதிகம் மிகுந்த தமிழ்நாட்டில் நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் உற்பத்தி செலவு ஆகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் வழங்கக்கூடிய பயிர் கடன் வெறும் ₹.36,000 மட்டுமே. இதேபோல தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களின் உற்பத்தி செலவில் 40 முதல் 45 சதவீதம் மட்டுமே பயிர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. மற்ற செலவுகளுக்கு நாங்கள் என்ன செய்வது. இன்னொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், இன்னொரு பயிர்கடன் பெற்றுத் தான் விவசாயம் செய்ய வேண்டி இருக்கிறது.

இது போன்ற சூழலில் கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வாங்க வேண்டும் என்றால் சிபில் ரிப்போர்ட் கட்டாயம் எனவும், தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் கூட்டுறவு சங்கத்தில் கடன் கிடையாது என அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

2017 ஆம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. ரிசர்வ் வங்கியே அறிவிக்காத நிலையில், மாநில அரசு ஏன் இந்த முயற்சியை எடுக்க வேண்டும்.

இதே போன்ற பிரச்சனை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டபோது, அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களிலும், தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர் கடன் பெறும்போது அவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. அப்படி மீறி சிபில் ஸ்கோர் கட்டாயம் என கூறும் வங்கிகள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்து, அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எனவே தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி வரும் ஜூலை 10ஆம் தேதி சென்னையில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி மாபெரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் செய்துள்ளோம். அதன் பிறகும் தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு சங்க பொதுக்குழுவைக் கூட்டி மாவட்ட அளவில் மிகப்பெரிய பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். எந்த வகையிலும் இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவை திரும்பப் பெறாத வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்