திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார் விசாரணை!
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விக்டோரியா ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் நடத்தி வந்த துணிக்கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அலெக்ஸ் அந்த கடையை மூடி விட்டார். அந்த வியாபாரத்திற்காக பல இடங்களில் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியதால் அவருக்கு அதிக அளவு கடன் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மேலும் கடன் வாங்கி திருச்சியில் சொந்த வீடு ஒன்றையும் அலெக்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அலெக்சுக்கும் அவருடைய மனைவி விக்டோரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடன் அதிகமாக இருந்த சூழலில் நேற்று இரவு
தம்பதிகள் இருவரும்
தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு
தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நான்கு பேரும் இறந்து கிடந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர், இன்று காலை இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின்
உடல்களை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சினை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.