தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புர.விசுவநாதன் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி தலைவர் அரவிந்தசாமி, கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவசாமி, அரியலூர் மாவட்ட தலைவர் சின்னப்பன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல கரும்பு டன்னிற்கு ரூ.4000 ம், கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.15,000 சேர்த்து அறிவிக்க வேண்டும். ஆறுகள், ஏரிகள், குளங்கள், பெரிய அணைகள், பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி புணரமைக்க வேண்டும். ஆறுகளில் கரை புரண்டு வருகின்ற வெள்ள நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க தடுப்பணைகளை கட்ட வேண்டும். காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டம் உமையாள்புரம் மருதூர் இடையே காவிரியில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புர.விசுவநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,…
முந்தைய ஆட்சியில் நெல் நடவு மானியம் வழங்கியது போல ஹெக்டருக்கு 8000 நடவு மானியமும், ஒரு ஆதார் அட்டைக்கு 100 கிலோ விதை நெல் கொடுக்க கோரியும், மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்வதோடு 100% மக்காச்சோளம் விதை வழங்க வேண்டும், இடுபொருள் கொடுப்பதை நிறுத்தி அதற்கு பதிலாக பின்னேர்ப்பு மானியமாக ஏக்கருக்கு 10,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்க தவறினால் விவசாயிகளை ஒன்று திரட்டி வருகின்ற ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.
Comments are closed.