திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, ஆணையர் சரவணன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அதிமுக மாமன்ற தலைவரும், 35வது வார்டு கவுன்சிலருமான
அம்பிகாபதி பேசும் பொழுது,

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையை ஏற்று நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி பகுதியிலும் பெட்டிக்கடைகளில் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது என கூறினார். அப்போது
மேயர் அன்பழகன்
இங்கு அரசியல் பேச இடம் இல்லை என்றார். அதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்களும் அதிமுக கவுன்சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்….
பெட்டி கடைகளுக்கு வரி வசூலிக்கும் உரிமை உள்ள மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க அதிகாரம் இல்லை என்கிறார்கள். மாநகராட்சிக்கு பொதுமக்கள் இளைஞர் மீது அக்கறை இல்லை .
மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இருவரும் வரி வசூல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். திருச்சியில் பெருகி வரும் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த தவறுகின்றனர் . இதனை மாமன்றத்தில் பேச அனுமதி அளிக்க மறுக்கும் மாநகராட்சி மேயர் அன்பழகனை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.




