அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பிப்.5 முதல் வேலை நிறுத்தம் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ திருமண மண்டபம் அருகே நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவா் லட்சுமணன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுச்செயலா் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க பொதுச்செயலா் லட்சுமிநாராயணன், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலா் லட்சுமி நாராயணன் கூறுகையில்…
கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பூரில் நடந்த மாநிலப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஊழியா் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து, இப்போது வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில், நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் போ் பங்கேற்கும் பேரணி நடத்தப்பட உள்ளது. அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலை தொடா்ந்தால், பிப்ரவரி 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். எனவே, தமிழக அரசு ஊழியா்களின் உணா்வைப் புரிந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றாா்.