திருச்சியில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் நுகர்வோர் பொருட்கள் ஆய்வகத்திற்கு என்.ஏ.பி.எல் அனுமதி!
திருச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் அலுவலகத்தில் அதன் இயக்குநர் புஷ்பவனம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்..
உபயோகிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
தயாரிப்பாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் கூற்றுகளை சோதனை செய்து முடிவுகளை வெளியிடுவது தான் உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் நோக்கம். எனவே தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் முயற்சியால் நுகர்வோர் பொருட்கள் “ஆய்வகத்திற்கு சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின்” (NABL) மூலம் அனுமதி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் ஏற்கனவே குடிநீர், எண்ணெய், பால், தங்கம் உள்ளிட்டவற்றின் தரம் சோதனை செய்து வருகிறோம். தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதியை கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்பட்டாலும், சோப்பு வகைள், உணவு, அழகு சாதனங்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்கள், துணி வகை, எழுது பொருட்கள் போன்றவைகள் ஆய்வு செய்ய
உட்கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், அரசும் உதவி செய்தால், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பொருட்கள் கிடைக்க
வழிவகை செய்ய முடியும் என்று கூறினார். மேலும் கடந்த 48 ஆண்டுகளாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நுகர்வோர்களுக்கு தேவையான ஆராய்ச்சி, குறைகளை கேட்டறிதல், அவற்றை அரசுக்கு கொண்டு செல்லுதல், சட்டரீதியான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகளை செய்து வருகிறோம். இந்த பாதுகாப்பு குழுவின் மூலம் நுகர்வோர்களுக்கு பல்வேறு நன்மை பயக்கும் பணிகளை
செய்துள்ளோம். நாங்களே முன் வந்து மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு பகுதிகளில் மாநகராட்சி தண்ணீரை எடுத்து வந்து அவற்றின் தரத்தை சோதித்து பொதுமக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது நாங்கள் தரும் பரிசோதனை முடிவை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு
தொடர முடியும். அதேபோல் திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கிராம புறப்பகுதிகளில் உள்ள மக்களிடம் சென்று அவர்கள் எந்த பொருளின் தரம்
குறித்து அறிந்து கொள்ள வேண்டுமோ அதன் மாதிரிகளை பெற்று வந்து நாங்கள் சோதித்து தருகிறோம். அந்த மாதிரிகளை சேகரிப்பதற்காகவே நாங்கள் ஊழியர்களை நியமித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் பிரச்சனை தொடர்பாக 700 வழக்குகள் இந்த பாதுகாப்பு குழுவின் மூலம் பதிவு
செய்துள்ளோம். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் தான் தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் எல்லாம் வாங்குகிறார்கள். ஆனால் அது ஒரு பெரிய
ஏமாற்று வேலை. எனவே இதுத் தொடர்பாக நாங்கள் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறோம் என்றார்.