தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்-திருப்பரங்குன்றம் விவகாரம்
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்-திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிசம்பர் 13) நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை டிசம்பர் 1ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இதனால் மலைக்கு செல்லும் பாதைகளில் கடந் ஒரு வாரத்திற்கும் மேலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு
திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, ‘காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி’ அளித்து உத்தரவிட்டார்.50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ மூலமாக முழுமையாக கண்காணிக்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி உள்ளூர் மக்கள் இன்று (டிசம்பர் 13) காலை 9 மணி முதல் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Comments are closed.