மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்துள்ளது. திருச்சியில் வாக்காளர்கள் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிராப்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் காஜாமலை பகுதியில் வாக்களித்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பத்மஶ்ரீ தாமோதரன் உறையூர் பகுதியில் உள்ள எஸ்.எம் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு லால்குடி அருகே உள்ள காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் உள்ள சிறு வயலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். திருச்சி சிவா எம்.பி மற்றும் சூர்யா சிவா ஆகியோர் வெஸ்ட்றி பள்ளியிலும், எம்.எல்.ஏ பழனியாண்டி சோமரசம் பேட்டை பகுதியிலும் வாக்களித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் கே.கே நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மைதீன் காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேயர் அன்பழகன் மேலப்புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி பா.குமார், திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் காஜாபேட்டை மந்தை பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.