வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்டகாங்கில் இந்திய விசா மையம் மூடல்!
வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்டகாங்கில் இந்திய விசா மையம் மூடல்!
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய பேராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
மாணவர் போராட்டங்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி, பிப்ரவரி 12 அன்று நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளராக இருந்தார். டாக்காவில் நேற்று முன்தினம் ஹாடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, டிசம்பர் 12 அன்று முகமூடி அணிந்த மர்ம நபர்களால் அவர் தலையில் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 18ல் உயிரிழந்தார்.இதற்கிடையில், வங்கதேசத்தின் பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இந்து இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கி, மரத்தில் கட்டி வைத்து எரித்தனர். இதனால் தொடர்ந்து

பதற்றம் நிலவுகிறது.மேலும், இந்திய துணைத் தூதர் இல்லம், அலுவலகத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது. தற்போது வங்கதேசத்தின் 2-வது பெரிய நகரமான சிட்டகாங்கிலும்,இந்திய விசா விண்ணப்ப மையம் நேற்று மூடப்பட்டது. இந்திய விசா விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேசத்தில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வர இந்திய விசா பெற வேண்டும்.
அதற்கென அமைக்கப்பட்டுள்ள இந்திய மையங்களில் விசா விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். அதைப் பரிசீலித்து இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு தகுதி உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு இந்திய விசா வழங்கப்படும்.பெரும்பாலும் மருத்துவ சிகிச்சை, வர்த்தகம் போன்ற வற்றுக்காக வங்கதேசத்தினர் இந்தியா வருகின்றனர். இந்திய விசா மையங்கள் மூடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு விசா கிடைப்பது சிக்கலாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வங்கதேச இடைக்கால அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாஸ் கொலையை கண்டித்து இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் 25 இளைஞர்கள் கோஷமிட்டனர்.
ஆனால், வங்கதேச தூதரகத்துக்கு, உள்ளே நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்றதாக வங்கதேச பத்திரிகைகள் தவறாக செய்திகள் வெளியிட்டன. அதுபோல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அங்கிருந்த இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தி விட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் பொதுவெளியில் உள்ளன. அவற்றைப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .


Comments are closed.