108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் சிறப்பாக துவங்கியது. மறு நாள் 13 ஆம் தேதி முதல், 22 ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெற்றது. இந்த பகல் பத்து நிகழ்வில் நம் பெருமாள் பல்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து உற்சவம் நிறைவு நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். 23 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. ராப்பத்தின் 7 ஆம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் கைத்தல சேவை நடைபெற்றது.
8 ஆம் நாளான நேற்று மாலை கோவில் 4 ஆம் பிரகாரத்தில் உள்ள மணல்வெளியில், திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.
திருமாலுக்கு தொண்டுகள் செய்த திருமங்கை மன்னன், தன்னிடம் இருந்த பெரும் பொருள்களை செலவு செய்தார். கைங்கர்யத்தை தொடர்ந்து செய்வதற்கு, தன்னிடம் பொருள் இல்லாமல், வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதால், ஓம் நமோ நாராயணாய என்ற நாமத்தை உபதேசித்து, அவரை ஆட்கொண்ட வைபம் தான் வேடுபறி உற்சவம். இந்த வேடுபறி உற்சவத்தின் போது தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான ஜனவரி 2 ஆம் தேதியன்று தீர்த்தவாரி, நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.
திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.