உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு அலுவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடப்பு பருவமழை காலத்தில் 50 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை செயல்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் நடவு செய்ய மரக்கன்றுகளை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அதியமான், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், பசுமை தோழன் காட்வின் நிஜில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.