பொது மக்களின் வசதிக்காக திருச்சி மாநகராட்சி வரி வசூல் நேரம் அதிகரிப்பு!
திருச்சி மாநகராட்சியின் வரி வசூல் நேரத்தை வேலைநாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என அதிகரித்து மாநகராட்சி ஆணையா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களுக்கு தீவிர வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது. 2023 – 24 ஆம் ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், காலிமனை வரி, புதைவடிகால் சேவை கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் (கடை வாடகைகள்) உடனடியாகச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி வாா்டுகுழு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் பொருட்டு வரிவசூல் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சி வாா்டு குழு அலுவலகங்களில் உள்ள வரிவசூல் மையங்களின் பணி நேரத்தை காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

