கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பயணி ஒருவர் கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தப்படும் ரெகுலேட்டர் ஒன்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரெகுலேட்டரை கைப்பற்றி அதில் மறைத்து வைத்திருந்த 198 கிராம் எடையுள்ள 14 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.