செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க, கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் – திருச்சியில் செவிலியர்கள் சங்க கௌரவ செயலாளர் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கௌரவ செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு செவிலியர்கள் சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌரவ செயலாளர் லீலாவதி:
எம்ஆர்பி செவிலியர்களை ஒப்பந்தமுறையில் பணியாற்ற தமிழக அரசு தேர்வு செய்ததற்கு கண்டணத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நீண்ட காலம் போராடும் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யவேண்டும். 6 வது ஊதியக்குழுவில் பறிக்கப்பட்ட கிரேடு-3 செவிலியர் கண்காணிப்பாளர் பணியை மீண்டும் வழங்கவேண்டும். மேலும் செவிலியர் ஊதிய முரண்பாடுகளை அரசும், சுகாதாரத்துறையும் களையவேண்டும். அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் செவிலியர் பற்றாற்குறையைப் போக்க கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். மேலும் செவிலியர் பணியிடங்கள் உருவாக்கி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் தேர்தல்நேரம் என்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் தேர்தல் முடிந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். மேலும் கொரோனா காலத்தில் உயிரிழந்த செவிலியர்களுக்கான இழப்பீடு மருத்துவத்துறை நிர்வாகத்தினால் சரிவர வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.