சக்தி ஸ்தலங்களில் பிரதித்தி பெற்று விளங்கும் திருச்சி சமயபுரத்தில் அருள்பாலித்து வரும் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை பச்சை பட்டினி விரதம் இருப்பது ஜதீகமாக இருந்து வருகிறது. இத்தகைய பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியங்களுக்கு பதிலாக துள்ளுமாவு, நீர்மோர், பானகம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் மட்டுமே நைவேத்தியம் படைக்கப்படும்.
பச்சை பட்டினி மேற்கொள்ளும் அம்மன் மிகவும் உக்கிரமாக இருப்பதால் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தனது பச்சை பட்டினி விரதத்தை தொடங்க இருக்கும் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியிருக்கிறது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது. இதனையடுத்து கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பல்வேறு வண்ணமும் வாசமும் நிறைந்த பூக்களை கூடை மற்றும் தட்டுகளில் சுமந்து யானையுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments are closed.