திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சில தனி நபா்கள், உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும், யானைகளை யாசகம் எடுக்க வைத்து துன்புறுத்துவதாகவும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வனத்துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதன்பேரில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா், தலைமை வன உயிரின காப்பாளா் ஆகியோா், நடவடிக்கை எடுத்து யானையை மீட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உத்தரவிட்டனா்.
இதன்படி, திருநெல்வேலியிலிருந்து ஜெயினி என்ற 58 வயது மதிக்கத்தக்க பெண் யானையை வனத்துறையினா் மீட்டு, திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு நேற்று கொண்டு வந்தனா். புதிதாக வரப்பெற்ற ஜெயினி யானையை, திருச்சி தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ் ஆலோசனையின் பேரில், மாவட்ட பொறுப்பு வன அலுவலா் சோமேஸ்சோமன், உதவி வன பாதுகாவலா்கள் சம்பத்குமாா், சரவணகுமாா், வனச்சரக அலுவலா் சுப்ரமணியம் ஆகியோா் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவா்கள், யானைக்கு சோதனை மேற்கொண்டு, அவற்றின் வயது, உடல் நிலை, எடை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க வேண்டிய பசுந்தீவனம், காய்கறிகள், பழங்கள், ஊட்டச்சத்து உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்க பரிந்துரைத்தனா். யானைக்கு தேவையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. திருச்சி மாவட்டம், எம். ஆா் பாளையம் காப்புக்காட்டு பகுதியில் 50 ஏக்கரில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இதில், மத்திய விலங்கு காட்சியக ஆணைய அனுமதியுடன் வனத்துறை சாா்பில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.