தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு

தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு

ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-

கரும்பு மற்றும் நெல்லுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் ஒழுங்காகச் செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. அங்கே, நெல் கொள்முதல் செய்வதில் ஊழல் நடக்கிறது.

கஷ்டப்பட்டு விளைய வைத்த நெல் வீணாகப் போகக்கூடாது என்று நினைத்து கேட்கும் லஞ்சத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகு கூட அந்தக் கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. ஏதோ ஒரு விலை தான் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இப்படியெல்லாம் இல்லாமல், ஒழுங்காக, நேர்மையாக நம் மஞ்சளுக்கும் நியாயமான விலையை நிர்ணயித்து, தரமான விதைகளைக் கொடுத்தால் என்ன குறைந்து போய்விடுவார்கள்? இதெல்லாம் யோசிப்பதற்கு அவர்களுக்கு நேரமே இல்லை. விஜய்யை எப்படி முடக்கலாம்? தமிழக வெற்றிக் கழகத்தை எப்படி எல்லாம் முடக்கலாம்? என்பதும் 24 மணி நேரமும் அவர்களது சிந்தனையாக உள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் காலிங்கராயர் நதிகளின் இணைப்பிற்கு முன்னோடியாக இருந்தார். பவானி ஆற்றில் வரும் அதிகமான நீரை, அணையின் மூலம் தேக்கி தண்ணீர் வறட்சியான பகுதிகளுக்கு அனுப்பினார். ஆனால் இன்று நவீன வசதிகள் இருந்தும், அறிவியல் வளர்ச்சிகள் இருந்தும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தும், அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன, பவானி, நொய்யலாறு, அமராவதி ஆறு இணைப்புத் திட்டத்திற்கு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. வாக்குறுதி எண் 103, சொன்னார்களே செய்தார்களா? சரி, இது ஒரு பெரிய திட்டம் என்று வைத்துக்கொண்டால்கூட, ஆறுகளை தூய்மைப்படுத்த பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்குவோம், தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளைச் சுத்தப்படுத்துவோம் என்று சொன்னார்களே, செய்தார்களா? ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாகச் செய்வார்கள். மக்கள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மற்ற மாவட்டங்களில் மணல் காணாமல் போனது போல, மலைகள் காணாமல் போனது போல, நம் மாவட்டத்தில் தனி வளத்தை கொடுக்கக்கூடிய செம்மண்ணும் காணாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நம் மண்ணுக்கும், நம் ஆற்றுக்கும், நம் விவசாயிக்கும் தான் இந்த மோசமான நிலைமை.

ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று பார்த்தால், அதற்கும் வழியில்லை. 30 சதவீதம் நெசவாளர்களுக்குக் கூலி கொடுக்கப்படாமல் இருக்கிறது. அரசு நம் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த வேட்டி, சேலைக்கான கூலியைக் கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. அது சலுகையோ, உதவியோ, நலத்திட்டமோ கிடையாது. நம் உழைப்புக்கான ஊதியம், நம்முடைய உரிமை. அதற்கே போராட வேண்டிய நிலையில்தான் இந்த அரசு நம்மை வைத்திருக்கிறது. ‘பீக் ஹவர்’ (Peak Hour) கட்டணம் என்று மின்சாரத்திற்கு அநியாய விலை வைத்து, சிறு, குறு தொழில்களையும் செய்ய விடாமல் நம்மை முடக்கிவிடுகிறார்கள். அந்த ‘பீக் ஹவர்’ கட்டணக் கொள்ளையால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மிக அதிகமான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிறோம், போராடுகிறோம், கோரிக்கை வைக்கிறோம். எதையுமே இவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்று கொஞ்சம் யோசியுங்கள். அப்போதுதான் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முடியும். அதற்கு ஒப்பந்தம் போட முடியும். அப்படி ஒப்பந்தம் விடப்பட்ட விஷயங்களில் எல்லாம் என்ன நடந்தது என்று மக்களுக்குத் தெரியும். ஈரோட்டில் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள் தான் இருக்கிறது.

அதையெல்லாம் தீர்ப்பதற்கு ஒரு தீர்வு கூட சொல்லாமல், பெருமையாக ‘மாடல் அரசு’ என்கிறார்கள். இவற்றை கேட்டால் விஜய் அரசியலே பேச மறுக்கிறார், விஜய் சினிமா வசனம் மாதிரி பேசுகிறார், விஜய் பஞ்ச் வசனம் பேசுகிறார், விஜய் பத்து நிமிடம் தான் பேசுகிறார், ஒன்பது நிமிடம் தான் பேசுகிறார் என நம்மிடமே திரும்பி வருகிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? நான் எப்படிப் பேசினால் உங்களுக்கு என்ன? பேசுவதில் இருக்கும் விஷயம் என்னவென்று பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பின்னர் அது அரசியல் இல்லாமல் வேறு எதுதான் அரசியல்? உங்களைப் போலத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, இழிவாகப் பேசுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியல் நமக்கு வராது. உங்களை விட எனக்கு அது நன்றாகவே வரும். வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

காஞ்சிபுரத்தில் பேசியபோது, உங்களால் அமைக்கப்படப் போகும் ஆட்சியில், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று சிலவற்றைக் கூறினோம். அதையெல்லாம் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான விளக்கத்தை இப்போது கூறுகிறேன். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை ‘இலவசம்’ என்று சொல்லி இழிவுப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் பணத்தில் மக்களுக்குச் செய்வதை எப்படி இலவசம் என்று சொல்வீர்கள்? அப்படியே செய்துவிட்டாலும், ஓசியில் போற என்று சொல்லி இழிவுப்படுத்துகிறீர்கள்.

Bismi

இவற்றையெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைத்தீர்களா? மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் வந்து நிற்பான். இந்த விஜய் கேள்வி கேட்பான். இந்த விஜய் எப்பொழுதுமே மக்கள் பக்கம் தான். அதே போல் மக்களும் என் பக்கம் தான்.

என் மக்கள் மானத்தோடு, மரியாதையோடு, கௌரவத்தோடு வாழ வேண்டும். என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது. அப்படி அவர்கள் கௌரவத்தோடு வாழ வேண்டும் என்றால், அவர்களுக்கான வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றால் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர வேண்டும். வாழ்வாதாரம் உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் உயர்ந்தால் தான் வசதி வாய்ப்புகள் உயரும். இதெல்லாம் உயர்ந்தாலே தானாகவே அவர்களுடைய வாழ்க்கைத் தரம், அவர்களுடைய மரியாதை, அவர்களுக்கான கௌரவம் எல்லாமே உயரும். இதற்கான வழிகளையும் சூழல்களையும் அந்த அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் தான் அந்த அரசு ஒரு நல்ல அரசு.

இவற்றைத்தான் அன்று சொன்னோம். சொன்னால் மட்டும் போதுமா எப்படி செயல்படுத்துவிங்க என்று உடனடியாக கேள்வி வருகிறது. வாய் வார்த்தையாக மட்டும் சொல்வதற்கு நாங்கள் என்ன திமுகவா… தவெக..

எல்லாருக்கும் நிரந்தரமான ஒரு வீடு இருக்க வேண்டும் என்று கூறினோம். ‘எங்கள் ஆட்சியிலேயே நாங்கள் எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டோமே’ என்கிறார்கள். வாடகைக்கு இருப்பவர்களே இங்கு யாரும் இல்லையா? எல்லோருக்கும் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துவிட்டார்களா? அடுத்து, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என கூறினோம். அதற்கும் உடனே ‘எங்கள் ஆட்சியிலேயே எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டார்களே’ எனச் சொல்கிறார்கள். அது உண்மை என்றால் பள்ளி அளவிலேயே இடைநிற்றல் (dropouts) அதிகமானது யாருடைய ஆட்சியில்? மாணவர்கள், பிள்ளைகள் யாரும் பள்ளியில் சேரவில்லை என்று கூறி, 207 அரசுப் பள்ளிகளை மூடியது யாருடைய ஆட்சியில்?.

இதில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று நாடகம் வேறு. அடுத்து, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான வருமானம் வர வேண்டும். வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று கூறினால், ‘நாங்கள் கொடுக்காத வருமானமா, நாங்கள் கொடுக்காத வேலையா’ என்கிறார்கள். பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தீர்களே, எத்தனை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பினீர்கள்? குறைந்தபட்சம் ஒரு லட்சம் காலிப் பணியிடங்களையாவது நிரப்பினீர்களா? இதெல்லாம் கூறிவிட்டு மக்களை ஏமாற்றுவது யாருடைய ஆட்சியில்? அடுத்து மிக முக்கியமாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தான் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது? அவர்கள் சொல்வது உண்மையா? அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? மக்கள் நீங்களே சொல்லுங்கள். நமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் சமரசமே இருக்காது. அதனால்தான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறோம், தைரியமாக இருங்கள் மக்களே.

என்னென்ன செய்யப் போகிறோம் என்று காஞ்சிபுரத்தில் சொன்னது போலச் சொன்னால், எல்லாவற்றையும் தவறாகத் திரித்துப் பேசிக்கொண்டும், அவதூறு பரப்பிக்கொண்டும் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களும், மேடம் ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையைக் கூறி திமுகவை காலி செய்தார்கள் அல்லவா. ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள், திட்டுகிறார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டு. இப்போதுதானே புரிகிறது, அவர்கள் இரண்டு பேரும் கூறியதை இப்போது நானும் திரும்பச் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி. என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் இந்தச் சத்தத்தை ஒரு நாளும் உங்களால் முடக்க முடியாது. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும்.

அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் நம்முடன் இணைந்தது நமக்கு ஒரு மிகப்பெரிய பலம். செங்கோட்டையன் அண்ணன் அவர்கள் மாதிரி இன்னும் நிறைய பேர் நம்முடன் இணைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே உரிய அங்கீகாரத்தைக் கொடுப்போம். இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். சமீபத்தில் ஒரு இடத்தில் நம் முதலமைச்சர் அவர்கள், ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்குறேன்’ என பேசினார். நான் ஏதாவது பேசினால் சினிமா வசனம், அவர் பேசினால் அது சினிமா வசனம் இல்லை. அந்த வரி வ்சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டடது . உங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது? அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.சட்டம் ஒழுங்கில் நாடே சீரழிந்து இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்கிறது. பொய் வாக்குறுதிகளாகக் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தீர்களே என எதில் உங்களது குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒன்று, தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் நீங்களும் சரி, ஒன்றியத்தில் ஆட்சி செய்பவர்களும் சரி, நீங்கள் இரண்டு பேரும் முதலில் என்னுடைய குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் மக்களுடைய குணாதிசயத்தை தான் என்னுடைய குணாதிசயம் என கூறினேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த குணாதிசயமே வேறு மாதிரி இருக்கப்போகிறது. அதனை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்றால், மக்களே உங்களுக்குப் புரிய வைப்பார்கள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம். நண்ப, நண்பிகள் எல்லாம் நல்லபடியாக நடந்தது. பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்று விடுங்கள். எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள் தான் எனக்கு முக்கியம். தயவுசெய்து பாதுகாப்பாகச் சென்று வாருங்கள். இவ்வாறு விஜய் கூறினார் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்