பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் – சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பத்மஶ்ரீ தாமோதரன் களமிறங்கியுள்ளார். சமூக ஆர்வலரான இவர் திருச்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமாலயா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொது இடங்களில் மலம் கழிப்பதை மக்கள் தவிர்க்கும் வகையில் கழிவறைகளை கட்டிக் கொடுத்து உள்ளார். மேலும் கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கும் பல்வேறு பணிகள் செய்துள்ளார். பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்த தேர்தலில் வேட்பாளர் தாமோதரன் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, கொடியாளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் பெருகமணி நங்கவரம் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் விவசாய பணிகளை செய்வதற்கு வாகனங்களில் செல்ல முடிவதில்லை. ரயில் செல்லும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் அந்த சாலையில் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட வேட்பாளர் தாமோதரன் தான் வெற்றி பெற்றால் பெருகமணி – நங்கவரம் சாலையை அகலப்படுத்தி தரமாக அமைத்து தருவதாகவும், ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
மேலும் ஆரியம்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என வேட்பாளர் தாமோதரன்
வாக்குறுதி அளித்தார்.