எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நடவடிக்கை குறித்து எஸ்.ஆர்.எம் குழுமம் விளக்கம்!
திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 4.74 ஏக்கர் இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் குத்தகை காலம் முடிந்ததால் திருச்சி எஸ்.ஆர்.எம் விடுதியை கையகப்படுத்த கடந்த வெள்ளிக்கிழைமை சுற்றுலாத்துறை அதிகாரிகள் வந்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக எஸ்.ஆர்.எம் குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து எஸ்.ஆர்.எம் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..
1996ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் நிறுவனம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இன்று வரை எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பாக, வாடகைத் தொகையை முழுமையாக செலுத்தியுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உயர்வு தொகையும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடாத அதிக தொகையை செலுத்த சுற்றுலா வளர்ச்சி கழகம் வற்புறுத்திய தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம் 2003-ம் ஆண்டு முதல் வரி தொகையை கணக்கிட்டு எஸ்.ஆர்.எம் ஹோட்டல் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பாக்கித் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி 12 கோடி ரூபாய் செலுத்துமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த 4 ஆம் தேதி (04.06.2024) எஸ்.ஆர்.எம் ஹோட்டலுக்கு கடிதம் அனுப்பியது. இது எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடாத ஒன்றாகும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஊடகங்களில் அளித்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.
குத்தகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது சரியானது அல்ல எனவும், எஸ்.ஆர்.எம் ஹோட்டல் சார்பாக தெரிவிக்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.