மகா கும்பமேளா குறித்து அவதூறு; 140 பேர் மீது வழக்குப்பதிவு
மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது.
மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்று புனித நீராடி இருப்பதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்திருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 87 லட்சம் பேர் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கும்பமேளாவில் புனித நீராடிய பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைளதளங்களில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகா கும்பமேளா டி.ஐ.ஜி., வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Comments are closed.